அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு ஆணைக்குழு நியமனம்
அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு ஆணைக்குழு நியமனம்
எஸ் ஜே புஹாது
அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளரான அசோக பீரிஸ் தலைமையில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (22) நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, 2026.06.22 ஆம் திகதியிட்ட 2494/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கைகளை நிலையான முறையில் நிர்வகிப்பதற்காக, பல வருடங்களாக நிலவி வரும் சம்பள முரண்பாடுகள் மற்றும் பொது நிதி நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு:
1. குருப்புகே கேமா ஆன் விதுர்யா சுவர்ணாதிபதி
2. அலகியாதுர பிரேமலால் அபேசிங்க குணசேகர
3.நியங்கம பாலசூரியகே மொன்டி ரணதுங்க
4. நடராஜ் ரவிச்சந்தர்
5.வைத்தியர் ரண்தொம்பகே விமல் ஜயந்த
6.கலாநிதி கம்லத் மொஹொட்டிகே முதித் சுஜீவ
7. ஹத்தசின்கே திலகவர்தன
8. பிரிகேடியர் (ஓய்வுபெற்ற) பியல் ஜூட் பெர்னாண்டோ
9. அஹமட் லெப்பை முஹம்மது முக்தார்
10. செனரத் திஸ்ஸ பண்டார ரத்நாயக்க
11. அபேசிங்க வீரகோன் லால் சந்திர வீரகோன்
12. கஜதீர ஆரச்சி பியல் பத்மநாத
13. ஜயவீர பத்திரண
14. கொஸ்வின்னகே சரத் லால் பெரேரா
மேலும், 2026 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியிட்ட 26/0622/816/018-1 ஆம் இலக்க அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, SC/FR 23/2014 ஆம் இலக்க அடிப்படை உரிமை மனு தொடர்பான 2026.02.25 ஆம் திகதியிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கருத்திற்கொண்டு, முழு அரச சேவையின் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தத்திற்கான பொருத்தமான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் பொறுப்பும் இந்த ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் போது, புதிய தொழில்நுட்பப் போக்குகள் மற்றும் உலகளாவிய போக்குகள் குறித்தும் கவனம் செலுத்தி, எதிர்கால மாற்றங்களை எதிர்வு கூறி இப்பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
அத்துடன், மாறிவரும் உலகளாவிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, எதிர்காலத்திற்குப் பொருத்தமான, தொழில்நுட்ப ரீதியாக வலுவூட்டப்பட்ட, பிரஜைகளை மையமாகக் கொண்ட, நெறிமுறை மற்றும் பொறுப்புக்கூறத்தக்க அரச சேவையைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பும் இந்த ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
.
