பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வு: முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரத்தை சபையில் எழுப்பினார் உறுப்பினர் ஜெயகோபி
பருத்தித்துறை நகரசபை மாதாந்த அமர்வு: முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரத்தை சபையில் எழுப்பினார் உறுப்பினர் ஜெயகோபி
பருத்தித்துறை நகரசபையின் ஏப்ரல் மாதத்திற்கான மாதாந்த அமர்வு இன்று (30.04.2026) நடைபெற்ற நிலையில், நகரின் நீண்டகாலத் தேவையாகவுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட நிழற்குடை விவகாரம் தொடர்பில் கௌரவ உறுப்பினர் ஜெயகோபி அவர்கள் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய தீர்வை வலியுறுத்தினார்.
பருத்தித்துறை நகர ஆட்டோ சங்கத்தின் நீண்டகால வேண்டுகையான, பயணிகளுக்கும் சாரதிகளுக்கும் அவசியமான நிழல்குடையினை அமைப்பதற்கான கோரிக்கையினை, சங்க நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கமைய உறுப்பினர் ஜெயகோபி ஏற்கனவே சபையில் சமர்ப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மதிப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், பணிகளை விரைவாக முன்னெடுக்க முன்னதாக முடிவெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நிழற்குடையானது எட்டு அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மாறாக, சில வாரங்களுக்கு முன்னர் அதனை ஆறு அடியாகக் குறைத்து அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முச்சக்கர வண்டி சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, உரிய அளவுப்பிரமாணத்திலேயே (எட்டு அடி) அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த உறுதிமொழி வழங்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்தும் இதுவரை கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போதைய கடும் வெயில் காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகளும் பொதுமக்களும் தொடர்ச்சியாக பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதை சுட்டிக்காட்டிய உறுப்பினர் ஜெயகோபி, இன்றைய அமர்வில் பின்வரும் விடயங்களை முன்வைத்தார்
நிழற்குடை அமைக்கும் பணிகளைத் தொடங்குவதற்கு தடையாக உள்ள காரணங்கள் என்ன?
மக்களின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாக பணிகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம்.
இந்த வேலைத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் துரிதப்படுத்துமாறு அவர் சபையில் வலியுறுத்தினார்.
