Breaking News

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாக பிரிக்க வேண்டும்..!

 சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாக பிரிக்க வேண்டும்..!



சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாகப் பிரிப்பதன் ஊடாகவே வினைத்திறனான சுகாதார சேவையை பொதுமக்களுக்கு வழங்க முடியும் என சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த வியாழக்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடலின் போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;


சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இரண்டாக பிரிக்கப்பட வேண்டும்.அத்துடன் தற்போதைய பணிமனையும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.


இதனூடாகவே தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள்,குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கான சுகாதார சேவைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.


இதன்போது கூட்டத்திற்கு தலைமை வகித்த அரசாங்க அதிபர் ம.பிரதீபன் பதிலளிக்கையில்;


சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை இரண்டாகப் பிரிப்பது உடனடிச் சாத்தியம் இல்லை.


மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக கோரிக்கையை முன்வைத்து தற்போது உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் கட்டிடத்தை விரிவாக்க முடியும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


தென்மராட்சிப் பிரதேசமானது அறுபது கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய பரந்துபட்ட பிரதேசமாகவும்-அதிக சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றமையால் சுகாதார சேவைகள்,பிரதேச செயலகம் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்களால் மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.


அத்துடன் பிரதேத்திற்கான அபிவிருத்தி ஒதுக்கீடுகளும் போதுமானதாக இன்மையால் பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதேசமக்களால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.


அண்மையில் தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் கூட தென்மராட்சிப் பிரிப்பு விவகாரம் எதிரொலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.