யாழ் மாவட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்..!
யாழ் மாவட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்..!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருவது நல்லதொரு எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் செயற்பாடாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற ஊராட்சி முற்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வடக்கு மாகாணத்தில் ஊராட்சி முற்றச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையோடு மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கிராம மற்றும் பிரதேச மட்டங்களில் தீர்க்கப்பட முடியாத அல்லது தீர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் களமாக இந்த மாவட்ட ஊராட்சி முற்றம் அமைகின்றது.
கிறிசலிஸ் அமைப்பினர் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியலில் பெண்களின் வகிபாகம் ஆகியன தொடர்பில் தமது காத்திடமான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
கிறிசலிஸ் அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள் பலர் இம்முறை உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட்டு சபைகளுக்கு தெரிவாகியுள்ளனர்.
அவர்கள் மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர்கள்.மக்களுக்காக குறிப்பாக பெண்களின் பிரச்சனைகளுக்காக அவர்கள் குரல் கொடுப்பார்கள்.
ஊராட்சி முற்றச் செயற்பாடுகளை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தோடு மட்டும் செயற்படுத்தாது கிராம மற்றும் பிரதேச மட்டங்களுக்கும் அதனை கொண்டு செல்ல வேண்டும்.
அப்போது கிராம மட்டப் பிரச்சனைகளை கிராமத்திலேயே தீர்க்கக்கூடிய நிலை ஏற்படும்.
அதேநேரம் பெண்களுக்கு வழங்கப்படுகின்ற கல்வி மற்றும் அறிவு ஆகியன அந்த பெண் சார்ந்த சமுகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.ஒரு பெண் வளர்ச்சியடையும் பட்சத்தில் அவர் சார்ந்தவர்கள் முன்னேறுவார்கள்.அது ஒரு வினைத்திறனான சமுகத்திற்கு பயனுள்ளதாக அமையும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்கள் சுயதொழிலில் முன்னேறி வருகின்றனர்.
தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் செல்வாக்குச் செலுத்துபவர்களாக மிளிர்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15பிரதேச செயலாளர்களில் 8பேர் பெண்களாக உள்ளனர்.
பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொண்டாலும் சகல பீடங்களில் பெண்கள் அதிகளவில் காணப்படுகின்றனர்.
இது சமுக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த சான்றாகக் காணப்படுகின்றது.
இருப்பினும் சில குறைபாடுகள் மற்றும் இடர்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமலும்-அதேநேரம் தட்டிக்கழிக்கப்படும் சூழ்நிலைகளும் உள்ளன.
அவ்வாறான பிரச்சனைகளை இயன்றவரை தீர்த்து ஆரோக்காயமான சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.