Breaking News

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்தோடு ரூ. 2 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.



அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் “ஊழல்” குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ரூ, 330,000 தொகையை விடுவித்ததாக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 2 குற்றச்சாட்டின் அடிப்படையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை குற்றவாளியாகக் கண்டறிந்து தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.