Breaking News

வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்!

 வீதி விதிமுறைகளை மீறிய மானிப்பாய் பொலிஸார்!



மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.


இதன்போது மானிப்பாய் பொலிஸார் அங்கு கடமையில் இருந்தனர். இதன்போது பொலிஸார் தமது வாகனங்களை வீதி விதிமுறைகளை மீறி பாதசாரி கடவைக்கு அண்மையில் நிறுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.


சாதாரண பொலிஸார் தமது முச்சக்கர வண்டியையும், வீதி போக்குவரத்து பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளையும் அங்கு நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.


அத்துடன் ஏற்கனவே அங்கு வேறு வாகனங்களும் தரிக்கப்பட்டு காணப்பட்டது. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை ஆனால் அதற்கு பின்னர் வந்த வாகனங்களை அங்கே நிறுத்த வேண்டாம் என்று கூறி மக்களுடன் முரண்பட்டுவிட்டு தாங்கள் அங்கேயே தமது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.


குறித்த வீதியானது போக்குவரத்து நெரிசலுடன் கூடிய சிறிய வீதியாக காணப்படுகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே அதனை தட்டிக் கழிக்கும் வகையில் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் வழிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை

 விடுத்துள்ளனர்.