ஈரானின் 47 ஆண்டுகால வரலாறு தலைகீழ்..! அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரம்
ஈரானின் 47 ஆண்டுகால வரலாறு தலைகீழ்..! அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரம்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் இரண்டாவது நாள் இன்றாகும் (01). ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றையே புரட்டிப்போடும் வகையில், அதன் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி தெஹ்ரானில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே படுகொலை செய்யப்பட்டதையடுத்து, இந்த இராணுவ நடவடிக்கை ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது.
இந்தத் தொடர் தாக்குதல்கள் மூலம் ஈரானிய ஆட்சிமுறை குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினரின் அபாரமான புலனாய்வுத் திறன் மற்றும் தனது உயர்மட்டத் தலைவர்களைப் பாதுகாப்பதில் ஈரானிய இராணுவத்திற்கு இருக்கும் இயலாமை ஆகியவை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானியத் தலைமைத்துவத்திற்கு இது தனது இருப்பைத் தீர்மானிக்கும் ஒரு போராட்டமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தற்போதைய ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அந்நாட்டு மக்களைத் தூண்டிவிட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப் போராட்டத்தை "தலைமுறைகளுக்குப் பிறகு கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பு" என்று வர்ணித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் மதகுருமார்களின் ஆட்சி மீதான அதிருப்தி ஈரானிய மக்களிடையே இன்னும் நீடிக்கிறது. முன்னதாக இடம்பெற்ற போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய சூழல் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் சக்திவாய்ந்த 'இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை' தொடர்ந்தும் தற்போதைய தலைமைத்துவத்திற்கு விசுவாசமாகவே உள்ளது.
ஈரானியப் படைகள் கடுமையான பதிலடி கொடுப்பதாக உறுதியளித்திருந்தாலும், கடந்த கால மோதல்களில் அதன் இராணுவக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதங்கள் காரணமாக அவர்களால் எந்த அளவிற்குத் திறம்படப் பதிலடி கொடுக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரான் ஒருவேளை கடுமையான பதிலடித் தாக்குதல்களை முன்னெடுத்தால், அந்நாடு "இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டிராத அளவிலான பேராற்றலை" எதிர்கொள்ள நேரிடும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்தப் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
