Breaking News

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சிங்கள தேசம்..!

 ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சிங்கள தேசம்..!



ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஜெனீவாவில் வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.


இந்த அமர்வில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.


அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலைமை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடுகள் இடம்பெற உள்ளன.


இதனால், இலங்கை இராணுவத்தினருக்கு போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்கள் சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக காட்டப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


அதற்கெதிராக பொதுமக்களின் கையெழுத்துகளை சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இந்த முயற்சி சரத் வீரசேகரவின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக, கொழும்பு 8இல் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் வெள்ளிக்கிழமை இந்த கையெழுத்து சேகரிப்பு தொடங்கப்பட்டது.

பௌத்த மதகுருமார்கள், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.


மேலும் திங்கட்கிழமை முதல் கொழும்பு – புறக்கோட்டை, கண்டி, குருணாகல், களுத்துறை, சிலாபம், கம்பஹா, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்படவுள்ளது.

சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் பின்னர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளன.


இந்நிலையில், வரவிருக்கும் ஜெனீவா அமர்வில் இலங்கை சார்பில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றவுள்ளார்.


அவர் தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல், ஜனநாயக மற்றும் மனித உரிமை நிலைப்பாடுகளை சர்வதேச சமுதாயத்திற்கு விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, பிரித்தானியா மற்றும் கனடா இணைந்து இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.