13ஐ வேண்டாம் என்போர் அதை விட அதிகாரம் உள்ள அரசியல் அமைப்பை கொண்டுவர முடியுமா? - சிரேஷ்ட ஊடகவியலாளர் தனபாலசிங்கம் கேள்வி!
13ஐ வேண்டாம் என்போர் அதை விட அதிகாரம் உள்ள அரசியல் அமைப்பை கொண்டுவர முடியுமா? - சிரேஷ்ட ஊடகவியலாளர் தனபாலசிங்கம் கேள்வி!
13 ஐ வேண்டாம் எனக் கூறும் தமிழ் கட்சிகள் 13-ஐ விட அதிகாரம் உள்ள ஒரு அரசியல் அமைப்பை தமிழ் மக்களுக்கு கொண்டு வருவோம் என மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் கேள்வி எழுப்பினார்.
நேற்றையதினம் சனிக்கிழமை தந்தை செல்வா நினைவரங்கில் இடம்பெற்ற ரெலோ அமைப்பின் வீரர்கள் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகளிடத்து நிலையான ஒரு கூட்டு இல்லாமை மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் சிலர் 13 ஐ வேண்டாம் என கூறுகின்றார்கள்.
நான் அரசியல் கட்சி சார்ந்தவன் அல்ல நான் ஒரு ஊடகவியலாளர். பதின்மூன்றை வேண்டாம் எனக் கூறுபவர்கள் பதின்மூன்னறில் உள்ள அதிகாரங்களை விட கூடுதலான அதிகாரங்களை பெற்று கொடுப்போம் என மக்களுக்கு உறுதி வழங்க முடியுமா?.
என்னைப் பொறுத்தவரையில் பதின்மூன்றை நிராகரிப்பவர்களால் மக்கள் முன் உறுதி வழங்க முடியாது.
பதின்மூன்றாவது திருத்தம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் அமைப்பில் இருக்கின்ற விடயம் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இன்றும் அரசியலமைப்பில் 13 இருக்கிறது அல்லாவிட்டால் வடக்கு கிழக்கு பிரிந்தது போன்று தூக்கி எறியப்பட்டிருக்கும்.
13 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் சிலவற்றை சாதிக்கக்கூடிய அல்லது கையால கடியஅ அதிகாரங்கள் 13 இல் இருக்கிறது.
மாகாண சபை ஆட்சி அதிகாரம் தமிழ் தேசிய கட்சிகளிடம் இருந்த போது அதை சரிவர பயன்படுத்தினோமா இல்லை தரகு அரசியல் செய்தோம்.
மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் காலத்துக்கு காலம் பறிக்கப்பட்டு வந்தது உண்மை இருந்தாலும் இருக்கின்ற அதிகாரங்களை ஏன் நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதற்கு நாங்களே பொறுப்பு.
சமஸ்டி தொடர்பில் பேசுகிறோம் தற்போது உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் இடம் பெற்று சபைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் ஆடசி மன்றங்கள் அனைத்தும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிராகரிக்கிறோம் என யாராவது கூற முடியுமா.
ஆகவே 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு அதைவிட அதிகாரம் உள்ள திருத்தத்தை கொண்டுவர முடியுமா என சிந்திப்பதே நடைமுறை சாத்திய விடயம் என அவர்
மேலும் தெரிவித்தார்.