புதிய கூட்டானது திரு. சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
புதிய கூட்டானது திரு. சுமந்திரன் மீதான முன்னணியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமே - கீதநாத் தெரிவிப்பு!
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, திரு. சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 2025ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைத் தேர்தல்; அதற்கு முன்னரான இரண்டு தேர்தல்களின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களின் வெளிப்பாடாக அமைந்ததுடன், மக்கள் தமது மேலான ஆணையை தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வழங்கியிருந்தனர்.
மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் மக்களுக்கான சேவையினை செய்வதற்குப் பதிலாக வாக்குகளை பெற்றுக்கொண்ட கட்சிகள் தனிப்பட்ட அரசியல் பகையை மட்டும் பிரதானப்படுத்தி செயற்படுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம்.
குறிப்பாக அண்மையில் புதிதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு, திரு. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இதுவரை பேசி வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறான ஒன்று என்பதுடன், திரு. கஜேந்திரகுமார் தரப்புக்கு இருக்கும் திரு. சுமந்திரன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடிகிறது.
தமிழ் மக்கள் கொடுத்த ஆணையை, இவ்வாறான தனிப்பட்ட எதிர்ப்பு அரசியலாக வெளிப்படுத்துவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது?
எனவே, தமிழ் மக்களை மையப்படுத்திய அரசியல் சேவையில் ஓர் அணியாக ஈடுபடுவதே மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் எதிர்பார்க்கும் ஒன்றாக காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.