புதிய பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து - எச்சரிக்கும் சபா குகதாஸ்!
புதிய பயங்கரவாத தடைச் சட்டம் மூலம் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து - எச்சரிக்கும் சபா குகதாஸ்!
ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடை சட்டத்தை விட புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள பயங்கரவாத தடைச் சட்டமானது மிகவும் மோசமானது. இதன் மூலம் மாவீரர்களின் நினைவேந்தல்களோ மற்றும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களது நினைவேந்தல்களோ அல்லது வேறு விடயங்களோ தடை செய்யப்படலாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோ கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில்,
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் உத்தேச வரைவானது பாராளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள பயங்கராத தடை சட்டமானது என்னென்ன விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்ற சரியான வரைவிலக்கணமே இல்லை. அந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்திற்குள் 110இற்கு மேற்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த பயங்கரவாதத்தை சட்டத்தை விட மிகவும் மோசமாக அதாவது எந்த விடயங்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக்கூடிய வகையிலேயே இந்த சட்டம் அமைந்துள்ளது. பெரும்பான்மை இன மக்களை விட தமிழ் மக்களை அதிகமாக பாதிப்புக்கு உட்படுத்தக்கூடிய வகையில் அது அமைந்துள்ளது.
அதிலே ஒரு விடயம் சொல்லப்படுகிறது, தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் அல்லது அது தொடர்பான அடையாளங்கள் அல்லது அது தொடர்பான நிகழ்வுகள் போன்றவற்றை நினைவுகூரும்போது அது பயங்கரவாதமாக கருதப்படும். அதற்கான தண்டனையாக 15 வருட கடூழிய சிறை தண்டனையுடன், 15 மில்லியன் ரூபா நஷ்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டிருக்கின்றது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடுதலைப் போராட்டம் தொடர்பான மாவீரர்களின் நிறைவேந்தல்களோ, அல்லது அந்தப் போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தியாகிகள் தொடர்பான நினைவேந்தல்களோ முற்றுமுழுதாக பயங்கரவாதமாக பார்க்கப்பட்டு, அதில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் மூலம் தண்டனைக்கு உட்டுப்படுத்த கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் அல்லது இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட வெளிநாட்டில் உள்ள அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுதல் அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களுடைய உதவிகளை பெறுதல் என்பன புதிய சட்டத்தின் மூலம் பயங்கரவாதமாக பார்க்கப்படுகின்றது. ஆகவே இது தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு பாரிய அடக்கு முறையாகவே காணப்படுகின்றது.
ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடைச் சட்டமானது நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு. அதைவிட புதிய சட்டம் கொண்டுவரப்படுமாக இருந்தால் அதைவிட பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய விடயமாகத்தான் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இருக்கிறது.
பயங்கரவாத தடைச்சட்டமானது நீக்கப்பட வேண்டும் என கடந்த காலத்தில் அனுர குமார தரப்பினர் எதிரணியில் இருந்தவேளை மிகத் தீவிரமாக குரல் கொடுத்தனர். இவ்வாறான சூழ்நிலையில் அதைவிட மோசமான சட்டத்தை தற்போது கொண்டு வருவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியை ஒரு முற்போக்கு சிந்தனைவாதியாக கருதிய மக்களுக்கு கொடுக்கின்ற பாரிய அடியாகத்தான் இது காணப்படுகின்றது.
இலங்கை தொடர்பான விடயங்களை உற்று நோக்குகும் உலகளாவிய ரீதியில் இருக்கின்ற பலர் கூறுவதுபோல், எதிர்காலத்தில், சீனாவில் இருக்கின்ற கட்டமைப்பு போல சமூக வலைத்தளங்களை, ஊடகங்களை அல்லது எதிரான குரல்வளைகளை நசுக்குகின்ற ஒரு செயற்பாடாகவே இப்படியான சட்டங்கள் அமைகிறது. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கின்றவர்கள் இந்த சட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் அடக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என அவர்கள் கூறுவதில் நியாயம் இருக்கின்றது.
எனவே இந்த புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் உத்தேச வரைபானது மீளப் பெறப்பட வேண்டும். அதற்காக சகல தரப்பினரும் போராட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாட்டில் ஒரு ஜனநாயக அரசியலை கட்டி எழுப்புவதில் பாரிய நெருக்கடியை உருவாக்கும் என்பதற்கு அப்பால் உலக நாடுகளிலிருந்து இலங்கையை அந்நியப்படுத்த கூடிய வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இந்த சட்டத்தை உடனடியாக பின்வாங்க செய்ய அனைத்து தரப்பினரும் களத்தில் இறங்கி போ
ராட வேண்டும் என்றார்.
