Breaking News

சாவகச்சேரி கோயில் குடியிருப்பு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்..!

 சாவகச்சேரி கோயில் குடியிருப்பு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்..!




தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் நிரந்தரமாக ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதியும்-சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி லலிதாராணி கோரிக்கை விடுத்துள்ளார்.


அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் குறை கேள் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;


கோவிற்குடியிருப்பு கிராமம் அதிக சனத்தொகையைக் கொண்ட பரந்த கிராமமாக காணப்படுகின்ற போதிலும் அங்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான நிரந்தர ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் இல்லை.


கிராமத்தில் சனசமுக நிலையங்கள்,வீடு என நான்கு இடங்களில் மேற்படி சேவை தற்காலிகமாக இடம்பெறுகின்றது.


மேற்படி இடங்களில் முறையான மலசலகூடவசதி உள்ளிட்ட வசதிகள் இன்மையால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பாதிக்கப்படுகின்றனர்.


இவ்வாறு தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் உரிய வசதிவாய்ப்புக்கள் இன்றிக் காணப்படுவதனால் அங்கு எடை மட்டுமே அளவிடப்படுகின்றது.


மேலதிக சேவைகளுக்காக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது.அங்கும் போதிய இடவசதி இல்லை. 


 எனவே கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் உரிய வளங்களுடன் நிரந்தரமாக ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் அமைக்கும் போது சிரமங்களைத் தவிர்க்க முடியும்.என மேலும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


மேற்படி கோரிக்கை தொடர்பில் கூட்டத்திற்கு தலைமைவகித்த அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கருத்துத் தெரிவிக்கையில்;


கோவிற்குடியிருப்பு கிராமம் பெரிய கிராமம் என்பதால் கிராமத்தில் ஓர் இடத்தில் நிரந்தர கட்டடம் அமைத்து சேவை வழங்கினால் அது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும்.


தற்போது சேவை முன்னெடுக்கப்படுகின்ற நான்கு தற்காலிக இடங்களிலும் உள்ள குறைபாடுகளை நீக்க முதற்கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தென்மராட்சிப் பிரதேச செயலர் மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்து கிராமத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையத்தின் சேவைகளை திறம்பட முன்னெடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மேலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


மேற்படி கலந்துரையாடலில் பிரதேச செயலர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.