Breaking News

பருத்தித் துறையில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்.. இந்தியாவின் உதவியை கேட்டுள்ளோம் சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு.

 பருத்தித் துறையில் காணாமல் போன மீனவர்கள் விவகாரம்.. இந்தியாவின் உதவியை கேட்டுள்ளோம் சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.. அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு.



பருத்தித்துறை கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடி உள்ள அதேவேளை சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். 


பருத்தித்துறை கடலில் மீன்பிடிக்கச் சென்று திரும்பாத நான்கு மீனவர்கள் தொடர்பாக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த சம்பவமானது மிகவும் வேதனையான ஒரு சம்பவமாக பார்க்கின்ற அதேவேளை தமது உறவுகளை காணாது தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவிக்க விரும்புகிறேன். 


குறித்த மீனவர்கள் தொடர்பில் இலங்கை கடற்படையின் உதவியுடனும் ராடர் கருவிகளின் உதவியுடன் இலங்கை கடல் எல்லை பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.


இலங்கை எல்லை கடற்பரப்புகளில் மேற்கொண்ட தேடுதலில் குறித்த மீனவர்கள் எவரும் சிக்காத நிலையில் இலங்கைக்கான இந்திய தூதரகம் ஊடாக இந்திய கடல் எல்லைப் பரப்புக்களில் தேடுவதற்கான உதவியையும் அனுமதியையும் கேட்டுள்ளோம். 


அமைச்சு மட்டத்தில் மீனவர்களை தேடுவதற்கான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தேடுதல் பணிகள் தடைப்படாமல் இருப்பதற்கு கடற்படையின் பூரண ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் சனிக்கிழமை தீவகக் கடலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்கள் பலத்த காற்றினால் திசை மாறி சென்ற நிலையில் உடனடியாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சில மணித்தியாலங்களில் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பி உள்ளனர்.


பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்களை எமது கடற் பரப்பிலும் சர்வதேச கடற்பரப்பில் தேடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் தனியார் படங்கள் மூலம் சர்வதேச கடல் எல்லைகளில் தேடுவதற்கான அனுமதிகளையும் வழங்கியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.