Breaking News

வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா..!

 வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய கிராமிய விளையாட்டு விழா..!



மட்டக்களப்பு வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடாத்திய வருடாந்த கிராமிய விளையாட்டு விழா கழகத் தலைவர் திரு.ம.ஐங்கரன் தலைமையில் நேற்று(06.06.2026) பிற்பகல் 03.00 மணியளவில் வந்தாறுமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.


தமிழர் கலாசார விழுமியங்களைப் பறைசாற்றும் வகையில் ஆரம்பமான இவ்விழாவில், முதலில் அதிதிகள் வரவேற்பு இடம்பெற்று தேசியக் கொடி, கழகக் கொடி ஏற்றல் இடம்பெற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கிராமிய மணம் கமழும் பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன.


குறிப்பாக மிட்டாய் ஓட்டம், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், சாப்பாட்டு ராமன், கயிறு இழுத்தல், நிற முட்டி உடைத்தல், தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற பல்வேறுபட்ட கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


இதில் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.


போட்டிகளில் பங்குகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத், கௌரவ அதிதிகளாக ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் தர்மலிங்கம் பிரபாகரன், ஏறாவூர்பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.வி.அனுஷகுமார், சிறப்பு அதிதிகளாக மட்/ககு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திரு.த.கிஸ்ணகாந் மற்றும் பிரஜாசக்தி தலைவர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், கழக முன்னாள் உறுப்பினர்கள், கழக ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.