உயிர் அச்சுறுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே - கிளிநொச்சி ஊடக அமையம்
உயிர் அச்சுறுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்
பணியை முடக்குவதற்கே - கிளிநொச்சி ஊடக அமையம்
உயிர் அச்சுறுத்தல், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்
பணியை முடக்குவதற்கே - கிளிநொச்சி ஊடக அமையம்
பொதுப்படையான விழிப்புணர்வை ஏற்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர்
தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக
விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு
எதிரான ஊடகவியலாளர்களின் பணியை முடக்குவதற்கே என தெரிவித்துள்ள
கிளிநொச்சி ஊடக அமையம் இதனை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்து
அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எந்தவொரு தனிநபரையும் பெயரிட்டுக் குறிப்பிடாமல், சமூக நலன் கருதி
பதிவிட்ட கருத்துக்காக ஓர் ஊடகவியலாளரின் உயிருக்கு அச்சுறுத்தல்
விடுப்பதானது, சுயாதீன ஊடக சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்ட
அச்சுறுத்தலாகும். இது ஒட்டுமொத்த ஊடகச் சமூகத்தையும் அச்சமூட்டி
மௌனிக்கச் செய்யும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.இவ்
அச்சுறுத்தல் மூலம் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்
பணியை முடக்குவதே சம்மந்தப்பட்டவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.
மேலும் இந்த கொலை மிரட்டல் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் காவல்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும், அச்சுறுத்தல் விடுத்த நபர் மீது
சட்ட நடவடிக்கை எடுக்காது காவல்துறையினர் காட்டும் மெத்தனப்போக்கும் இந்த
விடயத்தை சாதாரன ஒரு அச்சுறுத்தலாக மாற்றியிருப்பது எமக்கு பெரும்
அதிர்ச்சியை அளிக்கிறது. குற்றவாளிகளுக்குத் துணைபோகும் வகையிலான
இத்தகையச் செயல்பாடுகள், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையைச்
சீர்குலைப்பதுடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பெரும்
கேள்விக்குறியாக்கியுள்ளது. காவல்துறையின் இச் செயற்பாடு ஜனநாயகத்தை
பலவீனமடையச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.
எனவே ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபரை எவ்வித பின்னணி செல்வாக்குகளுக்கும்
இடமளிக்காது உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஊடகவியலாளரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து
ஏற்படும் பட்சத்தில், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய முழுப் பொறுப்பும்
காவல்துறையினரையே சாரும்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் ஊடகவியலாளர்களின் பேனா முனைகளை ஒடுக்கிவிட
முடியாது. உண்மையை உரக்கச் சொல்லும் எமது பயணத்தில் இத்தகைய
மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையின் சுதந்திரத்தையும்,
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அரசின்
கடமையாகும். இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படவேண்டும். எனவும்
தெரிவித்துக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
