Breaking News

தடம்மாறும் இளையசமுதாயத்திடம் இனம் சார்ந்த உணர்வுகளை கடத்தி அவர்களை பாதுகாப்போம்..!

 தடம்மாறும் இளையசமுதாயத்திடம் 

இனம் சார்ந்த உணர்வுகளை கடத்தி 

அவர்களை பாதுகாப்போம்..!




தமிழினம் இதுவரை போராடிய போராட்டங்கள்-செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்துமே வீணாகிப் போகக்கூடாது என்ற நோக்கில் தமது உணர்வுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் தீவிர செயற்பாட்டில் தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் அதனை உணர வேண்டிய இளைய சமுதாயம் உணர்வுகளை இழந்து தன்பாட்டில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது. 


கலாசாரம்-பண்பாடு -விழுமியம் என அனைத்திற்குமே அடையாளமாக விளங்கிய வடக்கு மாகாணத்தினுடைய தலைநகர் யாழ்பாணம் இன்று அந்த அடையாளத்தை படிப்படியாக இழக்கத் தொடங்கிவிட்டதா? என்ற அச்ச உணர்வு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழத் தொடங்கிவிட்டது.


எது எதுவெல்லாம் நடக்கக்கூடாது என்று எமது சமூகம் நினைத்ததோ அவை அனைத்துமே இன்று எம் கண் முன்னே தாராளமாக நடைபெறுகின்றன.


கடந்த வருடம் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழை பிரதேசத்தில் 37வயதான இளம் தாயொருவர் அவரது 16வயதேயான மகனால் கொலையுண்ட ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.


பெற்றோரை மதித்தல்,மூத்தோர் சொல் கேட்டல்,விருந்தினரை உபசரித்தல் என அனைத்து நல் ஒழுக்கங்களையும் கொண்டிருந்த எம் சமூகம் -இன்று பெற்ற தாயை ஈவிரக்கம் இன்றிக் கொலை செய்யும் அளவிற்கு மரத்துப்போய்விட்டதா? என்று எண்ணத் தோன்றுகின்றது. தனது காலால் தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்யும் தனயன் தாய் மண் மீது பாசம் கொண்டு உணர்வுகளைக் கடத்துவதும்-உரிமைப் போராட்டத்தைத் தொடர்வதென்பதும் எந்த விதத்தில் சாத்தியம்?


எங்கோ ஓர் மூலையில் நடப்பதை வைத்து ஒட்டுமொத்த இளம் சமுதாயத்தையும் எடை போட முடியாதென்பது உண்மையே.ஆனால் இன்று வடக்கு மாகாண இளம் தலைமுறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் திசை மாறிச் செல்கின்ற நிலையே காணப்படுகிறது.


கண்ணுக்குள் எண்ணெய் விட்டு பெற்றோர் உன்னிப்பாக கவனித்தாலும் பெற்றோரின் கண்ணிற்குள் மண்ணை தூவி விட்டு தவறிழைக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றன.


30வருட காலத்திற்கும் மேலாக வலிகளால் தமது வாழ்க்கையை ஓட்டிய சந்ததி ஒன்று இன்றும் எம் மத்தியில் வாழ்ந்து வருகிறது.


அந்தச் சந்ததி இன்பத்தைத் தொலைத்து பல வருடங்கள் கடந்து விட்டன.உறவுகளைத் தொலைத்து விட்டு தசாப்தம் கடந்தும் தேடி வருகின்றனர்.


அந்த சந்ததி இன்று தமது வாழ்நாளின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணி வருகின்றது.முன்னர் போல் அவர்களால் எழுந்து போராட முடியாவிட்டாலும் இன்றும் தம் கண் முன்னால் படுகொலை செய்யப்பட்ட -கடத்தப்பட்ட தம் உயிரினும் மேலான உறவுகளுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.


உறவுகளைத் தேடும் தாய்மார்களில் பலர் தமது ஆசை நிறைவேறாமலே உயிரிழந்து விட்டனர்.மேலும் சில தாய்மார்கள் தமது வாழ்நாளை விரல் விட்டு எண்ணி வருகின்றனர்.தாம் மடிவதற்குள் தொலைத்த உறவுகளின் முகத்தை ஒரு தடவையேனும் காணத் தவம் கிடக்கின்றனர்.அவர்களுடைய ஏக்கம் உறவுகளுக்காக தாம் ஆரம்பித்த இந்த போராட்டத்தை எதிர்கால சந்ததி பொறுப்பேற்று முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதே.


அந்த விதத்தில் சுதந்திர தினத்தை வடக்கு-கிழக்கில் கரி நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர்.


உறவுகளைத் தேடும் தாய்மார்களுக்கு இளம் தலைமுறையின் செயற்பாடு ஒரு விதத்தில் மனத் திருப்தியைக் கொடுத்திருந்தது.


ஆனால் அந்த உணர்வுகள் மற்றும் இனம் மீதான பற்று சகல இளம் தலைமுறையினர் மத்தியிலும் கடத்தப்படுமா என்பதும்- தொடர்ந்தும் முன்நகர்த்தப்படுமா ? என்பதும் சந்தேகமே.


2009இல் ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பிற்பாடு தமிழர் தாயகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.அவை புகுத்தப்பட்டனவா? அல்லது மக்களாகவே விரும்பி ஏற்றுக் கொண்டனரா எனத் தெரியவில்லை.


அபிவிருத்தியிலும் சரி -ஆடம்பரத்திலும் சரி அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது வடக்கு மாகாணம்.இந்த நவநாகரீக வளர்ச்சி இளம் தலைமுறை மத்தியில் பற்றிக் கொள்ள அவர்கள் வாழ்வியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.


அந்த மாற்றங்களால் இளைய சமுதாயம் படிப்படியாக தடம் மாறி இன்று அவர்கள் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கின்றனர்.


யுத்த காலத்திற்கு முன் கண்ணிலும் காணாத தொலைபேசி,போதைவஸ்து, களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வாள்வெட்டுக் கலாசாரம் என ஒவ்வொன்றும் இளம் சமுதாயத்தை சீரழித்து வருகின்றன.


இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இள வயது கர்ப்பம்,உறவுகளால்,ஆசிரியர்களால் சிறுவர்-சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்ற அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.


சில மாதங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்த 15வயதுச் சிறுமி ஒருவரும் -அவருடைய தாயாரும் குழந்தையை கைவிட்டு தப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.


பண்பாடு -கலாசாரம் என கட்டுக்கோப்போடு வாழ்ந்த எம் சமூகம் இன்று இவ்வாறு சீரழிந்து போக காரணம் என்ன?


கல்வி -விளையாட்டுத் துறை -பொருளாதாரம் என அனைத்திலும் சாதித்த தமிழினம் இன்று அனைத்திலும் பின்தங்கி கையேந்து நிலையில் வந்து நிற்கின்றது.


இளம் சமுதாயம் உழைப்பை மறந்து போதையிலும் -வேறு சுக போகத்திலும் திழைக்கத் துடிக்கின்றது. 


கட்டுக்கோப்புடன் இருந்த சமூகம் பாதுகாப்பு வேலிகளை இழந்து நிற்கின்றது.பாதுகாப்பு வேலி இல்லாத எம் இனம் மத்தியில் அனைத்து தீய செயற்பாடுகளும் வெகு இலகுவாக புகுத்தப்பட்டு விடுகின்றன.அவற்றை நன்மையா? -தீமையா? என ஆராய்ந்து பார்க்காத எமது இளம் சமுதாயம் அவற்றுக்கு அடிமையாகி தம்மையும் அழித்து -இனத்தின் இருப்பையும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.


சீரழியும் இளம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சமூகத்திடம் உள்ளது.அவ்வாறு மீட்டெடுக்காவிட்டால்


75வருட காலத்திற்கும் அதிகமான உரிமைக்கான போராட்டம் மற்றும் 30வருட கால ஆயுதப் போராட்டத்தால் இழந்தவை அனைத்துமே வீணாகிவிடும்.


தமிழினம் உரிமையை வென்றெடுக்க வேண்டும் ,தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே பலருடைய தாகம்.


அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டுமானால் இளம் சமுதாயத்தின் எண்ணங்கள் மாற வேண்டும்.வருங்கால சந்ததி இனத்தின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து பயணிக்க வேண்டும்.


இளைய தலைமுறையின் ஒரு பகுதி வெளிநாடுகளுக்கு தப்பியோட -எஞ்சியிருக்கும் இன்னோர் பகுதியினர் உணர்விழந்து நிற்கின்றனர்.இது காலப்போக்கில் இனத்தின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும்.


எனவே தடம் மாறும் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தி உணர்வுகளை அவர்கள் ஊடாக அடுத்துவரும் சந்ததிக்கு கடத்த வேண்டிய மிகப்பெரிய கடமை இன்றைய சமூகத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதனை நினைவுகூரும் முகமாகவும்- இறுதி நேரத்தில் உண்ண உணவின்றி உப்புக் கஞ்சி அருந்தி உயிர் வாழ்ந்த வரலாற்றையும் நினைவுபடுத்தும் முகமாக தமிழர் தாயகத்தில் பரவலாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்க்கப்படுகிறது. இந்த அவலச் சம்பவத்தை நினைவு கூரும் நிகழ்வில் எத்தனை பேர் உணர்வுபூர்வமாக பங்கெடுக்கின்றனர்?


அதில் இளைய சமுதாயம் எந்தளவிற்கு ஈடுபாட்டுடன் முன்நிற்கின்றது?


ஒருபுறம் அரசியலுக்காக கண்துடைப்பு நாடகம் இடம்பெற- இன்னோர் பக்கம் அதைப் பற்றி எள்ளளவும் அக்கறை இன்றி களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக நினைவு கூர்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே உள்ளனர்.


இனத்தின் விடுதலைக்காக போராடியவர்களும்-அவர்களுடைய உறவுகளும் மடிந்து வெறுமனே 15வருடங்களே கடக்கின்றன. ஆனால் எம் சமூகம் அவர்கள் செய்த பெரும் தியாகத்தை மறந்து நிற்கின்றது.


ஒரு புறம் உறவுகளை இழந்தவர்கள் தம்மை வருத்திக்கொண்டிருக்க- மறுபுறம் யுத்த வலியை அனுபவிக்காதவர்கள் சுகபோகத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்.அடுத்த தலைமுறையாவது இனத்தால் ஒன்றுபட வேண்டும்.அதற்கேற்றால் போல் அடுத்த சந்ததியை தயார்படுத்த வேண்டும்.


ஒட்டுமொத்த இளம் சமுதாயமும் தமிழ் மக்கள் பட்ட வேதனைகளையும் -அவமானங்களையும் மனதில் புதைத்து வாழ வேண்டும்.அந்த உணர்வே எம் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்.அந்த உணர்வுகளை தூக்கி வீசிவிட்டு செயற்படுவோமானால் அதுவே எம் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்.