பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும் சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும். அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.
பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும் சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும்.
அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்.
பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும், சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும் என
அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வுக் கட்டிரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்டாவது.
தமிழ் அரசியல் அண்மைக்காலமாக ஒரே பரபரப்பாக உள்ளது. தமிழ்த்தேசிய பேரவைக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்கான முனைப்புகள் சுமந்திரன், விக்கினேஸ்வரன் உடன்படிக்கை, சி.வி.கே.சிவஞானம் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு, என்பனவே சூழலை பரபரப்பாக்கியுள்ளன.
நிச்சயமான கூட்டுக்களாக இருப்பவை தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கிடையிலான கூட்டும், தமிழரசுக் கட்சி - தமிழ் மக்கள் கூட்டணி கூட்டும் தான். முதலாவது கூட்டு ஒரு கொள்கைக் கூட்டாக இருக்கின்ற அதேவேளை இரண்டாவது கூட்டு நல்லூர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டு கொள்கின்ற கூட்டாக உள்ளது.
இதில் கொள்கைக் கூட்டு என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் பேரவை - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான கூட்டுத்தான் பிரதான பேசுபொருளாக உள்ளது. வலைத்தளங்களும் அதனை மையப்படுத்தியே விமர்சனக் கருத்துக்களை அதிகளவில் முன்வைக்கின்றன.
இது தொடர்பான இரண்டு பக்க ஒப்பந்தம் கடந்த 02 ம் திகதி தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திர குமாருக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த பிரதான கைச்சாத்துடலுக்கு புறம்பாக கூட்டணியிலுள்ள அனைத்து அமைப்புகளும் ஒப்பந்தத்தை ஏற்று தனித்தனியாக கைச்சாத்திட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியிருந்தது. தாயகம், தேசியம், சுய நிர்ணயம் அடிப்படையில் அரசியல் தீர்வு, 13வது திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்வதில்லை, நல்லாட்சிக் கால “ஏக்;கிய இராச்சிய” அரசியல் தீர்வை நிராகரித்தல், இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை, முஸ்லீம் மக்களை அரசியல் தீர்வில் உள்ளடக்குவது தொடர்பாக முஸ்லீம் மக்களுடன் கலந்துரையாடுதல் என்பனவே இவ் ஐந்துமாகும். தமிழ் அரசியல் சமகாலத்தில் சந்திக்கின்ற முக்கிய விவகாரங்களை ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்கிறது எனக் கூறலாம்.
எனினும் மலையக மக்கள், தமிழக மக்கள் பற்றி எதுவும் கூறப்படாதது பொதுவான விமர்சனமாக முன்வைக்கப்படுகின்றது. தவிர ஒப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்களை நிறைவேற்றுவதற்கான வழி வரைபடம் பற்றி எதுவும் கூறப்படாதும் குறைபாடாக உள்ளது.
தீவிர தேசியவாதிகள் சிலர் சந்திரகுமாருக்கு புனித நீர் தெளித்தமை தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வலைத்தளங்களில் உலாவியிருந்தது. அரசியல் சூழல் மாறும் போது பண்புருமாற்றம் நிகழ்வது இயற்கையே! இதன்போது புதிய கூட்டுக்களும், புதிய அணி சேர்க்கைகளும் உருவாகலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதும் ஒரு பண்புரு மாற்றம் தோன்றியது. முரண்பட்ட அரசியல் சக்திகள் ஒன்றாக இணைந்திருந்தன. சந்திரகுமாரை உள்வாங்கியமையும் ஒரு பண்புருமாற்றமே! இனிமேல் சந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக செல்வது இதன் மூலம் தடுக்கப்படுகின்றது.
தேசத்தில் பல சக்திகளும் இருக்கும். தேசமாக திரட்டல் என்பது ஒரு அரசியல் இலக்கின் கீழ் அனைவரையும் திரட்டுவது தான். தூய்மை வாதம் பேசிக்கொண்டிருந்தால் மக்களை ஒருபோதும் தேசமாகத் திரட்ட முடியாது.
தமிழ்த் தேசிய அரசியல் இலக்கினை ஏற்க டக்ளஸ் தேவானந்தா முன் வந்தால் அவரையும் இணைத்துக் கொள்வதில் தவறேதும் இருக்க முடியாது. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதே இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும். கடந்த காலம் விமர்சனத்திற்குரியது என்றாலும் நிகழ்காலம் தான் இங்கு முக்கியமானது.
தமிழ்த் தேசியப் பேரவையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் புரிந்துணர்வு உடன்படிக்கையை நோக்கி வந்தமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியாகும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதன் முதன்மை நிலை தடுக்கப்பட்டாலும், தற்போதும் தாயகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக தேசிய மக்கள் சக்தியே உள்ளது. இதன் மிகப்பெரிய ஆபத்து முகவர்களாக இல்லாமல் கட்சியாக தாயகத்தில் ஊடுருவியமை ஆகும். தமிழ்த் தேசிய அரசியலை வேரடி மண்ணோடு அகற்றி விடும் ஆற்றல் இக்கட்சிக்கு உண்டு.
இரண்டாவது உள்ளூராட்சிச் சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றுவதாகும். கூட்டு இதற்கு எவ்வளவு தூரம் பங்களித்துள்ளது என்பது இந்த வாரத்தில் அனேகமாக தெரிந்துவிடும். பல சபைகள் இக்கூட்டின் ஆட்சியின் கீழ் வரும் என எதிர்வு கூறப்படுகின்றது வன்னி மாவட்டங்களில் இது பாதிப்பையும் கொண்டு வரலாம்.
மூன்றாவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவை தனிமைப்படுத்தி தற்காப்புக்குள் தள்ளுவதாகும். ஏறத்தாழ அது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனக் கூறலாம். சுமந்திரன் முன்னரை விட அதிகம் பதட்டப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. எச்சரிக்கை வெடிகளையும் விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்.
நான்காவது மக்களின் அபிலாசைகளுக்கு மதிப்பளிப்பதாகும். கட்சிகளுக்கிடையிலான கொள்கை முரண்பாடுகளை மக்கள் பெரிதாகப் பார்ப்பதில்லை. மாறாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர். உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பான மக்களின் தீர்ப்பு கூட ஒருங்கிணைந்து நிர்வாகத்தை நடத்துங்கள் என்பதே. அந்த ஒருங்கிணைவு குறிப்பிட்டளவில் தான் இடம்பெற்றிருக்கின்றது. கொள்கை உடன்பாடு இல்லாமல் நேர்மையான ஒருங்கிணைவு ஒரு போதும் சாத்தியப்படப்போவதில்லை.
ஐந்தாவது மக்களை தேசமாக திரட்டுவதாகும்.
பெருந்தேசிய ஆக்கிரமிப்புகளை ஒருங்கிணைந்து முகம் கொடுப்பதற்கும் சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேசமாக திரளுதல் அவசியமாகும்.
ஜனநாயகத்தில் மக்கள் திரள் என்ன கூறுகின்றது என்பதற்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கஜேந்திரகுமாரும் அவரது தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை ஒட்டுக் குழுக்கள் என கடுமையாக விமர்சித்திருந்தனர். இன்று அவர்களே கீழிறங்கி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சமதரப்பாக கருதி ஒப்பந்தத்தை செய்துள்ளனர். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தத்திற்கு சென்றிருந்தால் சமதரப்பு என்ற அந்தஸ்து ஒருபோதும் கிடைத்திருக்காது.
கஜேந்திரகுமார் இவ்வாறு பல படிகள் கீழிறங்கி வந்தமைக்கு பிரதானமாக மூன்று காரணங்கள் தொழிற்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். அந்த பின்னடைவு முன்னைய பாராளுமன்றத் தேர்தலை விட சரி அரைவாசியாக இருந்தது. இது அவர்களுக்கு கசப்பான உண்மையை வெளிப்படுத்தியது. மக்கள் ஒருங்கிணைந்த அரசியலைத்தான் விரும்புகின்றார்கள் என்பதே அந்த உண்மையாகும். பாராளுமன்றத் தேர்தலில் முன்னணி முன்னைய தேர்தல்களை விட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தால் இந்தக் கூட்டை எதிர்பார்த்திருக்க முடியாது.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைந்த அரசியல் தொடர்பாக நேர்மையான முனைப்பைக் காட்டிய அரசியல்வாதி என்றால் அது கஜேந்திரகுமார் தான். முயற்சிகள் சறுக்கிய போதும் அவர் கடுமையாக அதற்காக உழைத்தார். முதலில் சிறிய கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கினார். அது உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க விளை பயன்களைக் கொடுத்தது. தமிழ்த் தேசியப் பேரவையில் இணைந்த கட்சிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் காட்டிய நெகிழ்வான முன்மாதிரியும் தமிழ்த் தேசிய சக்திகளை வெகுவாக கவர்ந்தது.
இரண்டாவது முயற்சியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் ஒப்பந்தத்திற்கு சென்றார். அது இரண்டு அணிகளுக்கிடையிலான ஒப்பந்தமாக இருந்தது. ஐக்கிய முன்னணிக்கு அவசியமானவை இரண்டு விடயங்கள். கொள்கை உடன்பாடு, சம அந்தஸ்து என்பவையே அவையாகும். இந்த இரண்டு மெச்சத்தக்க வகையில் ஒப்பந்தத்தின்போது பேணப்பட்டன. மூன்றாவது முக்கிய விடயம் கூட்டுக்கான அமைப்புப் பொறிமுறையாகும். இது பெரிய சவாலைக் கொடுக்கலாம். அதுவும் நிறைவேறுகின்ற போதே கூட்டு பூரணமாகும்.
இந்தக் கூட்டு உருவானவுடன் தமிழ் அரசியலில் சுமந்திரனின் முதன்மை நிலை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தமிழ் அரசியலை முன்னோக்கி நகர்த்துகின்ற முக்கியஸ்தராக கஜேந்திர குமாரே இருக்கின்றார். முதன்மை நிலையை அவரே வகிக்கின்றார் எனக் கூறலாம். சுமந்திரன் அதிகம் பதட்டப்படுவதற்கு இந்த முதன்மை நிலைப்பறிப்பும் ஒரு காரணமாகும்.
இரண்டாவது கஜேந்திரகுமார் தமிழ்த் தேசிய அரசியலில் மிகவும் பற்றுக்கொண்ட ஒரு கொள்கைவாதி. தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியினால் தமிழ்த் தேசியம் சிதைந்துவிடும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது. ஒருங்கிணைந்த அரசியலை நோக்கி வந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மூன்றாவது தன்னுடைய காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கான அடித்தளத்தினை உருவாக்கி விட வேண்டும் என்ற அவரது விருப்பமாகும். தற்போது அவர் தமிழ் சிவில் அமைப்புகளை தமிழ்த் தேசிய பேரவையுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். மிகுந்த நெகிழ்ச்சியுடன் சிவில் அமைப்புகளுடன் அவர் பேசி வருகின்றார். தமிழ்த் தேசியப் பேரவையை ஒரு கட்சியாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் அவருக்கு இருக்கின்றது.
தமிழ்த் தேசிய பேரவைக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலான இந்த கூட்டு நீடிக்குமா? என்ற ஐயம் இன்று பலராலும் எழுப்பப்படுகின்றது. முன்னைய கூட்டுகள் சிதைந்தமை இந்த ஐயத்திற்கு காரணமாக இருக்கலாம்.
இன்றைய அரசியல் சூழல் வித்தியாசமானது. எனவே கூட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்குமென்றே கூறலாம்.
தமிழ்த் தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை இன்று மூன்று தரப்புகள் உள்ளன. தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியப் பேரவை, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி என்பவையே அவையாகும். விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி தானாகவே தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவுடன் சங்கமாகிவிடும். இந்த மூன்று தரப்புகளில் முதல் இரண்டு நிலையிலும் இருப்பவை தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியப் பேரவையும் தான். ஜனநாயகத் தமிழத் தேசியக் கூட்டணிக்கு சுயாதீன இருப்பு குறைவு. முதல் இரண்டில் ஒன்றுடன் இணையும் போது தான் அதன் இருப்பு பாதுகாக்கப்படும். தமிழரசுக் கட்சியுடன் சம அந்தஸ்தோடு அதனால் இணைய முடியாது எனவே தமிழ்த் தேசியப் பேரவையுடன் இணைவதைத் தவிர அதற்கு வேறு தெரிவு இல்லை.
முதல் இரண்டு தரப்புகளில் ஏதாவது ஒன்று கூட்டை முன்னெடுக்கும் போதுதான் கூட்டு நிலைத்து நிற்கும். தமிழ் மக்கள் பேரவையும், தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்பும் தோல்வியடைந்தமைக்கு காரணம் இந்த இரண்டு தரப்புகளும் வெளியில் நின்றமைதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் வரை தமிழ் மக்கள் பேரவை பலமானதாக இருந்தது. தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் பலம் அதன் சிவில் அமைப்புகள் தான். வாக்குகள் பொது வேட்பாளரை நோக்கி திரண்டமைக்கும் சிவில் அமைப்புகளின் ஆதரவே காரணமாக இருந்தது. சங்கு சின்னத்தை பறித்தெடுத்த போதும் பொது வேட்பாளர் பெற்ற வாக்குகளை ஜனநாயகத்தமிழ் தேசியக் கூட்டணியால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. பாராளுமன்றத் தேர்தலில் பங்கு பற்றுவதை தமிழ் மக்கள் பொதுச்சபை விரும்பவில்லை. இதனால் தங்களின் தேர்தல் நலன் முரண்படவே ஜனநாயகத் தமிழ் தேசியக்கூட்டணி தனி ஆவர்த்தனம் பாடியது. இது தனித்து செயற்பட முடியாததினால் தான் தமிழ்த் தேசியப் பேரவைடன் கூட்டுக்கு வந்தது.
இது ஒரு பூரணமான கூட்டணியா? தமிழரசுக் கட்சி இந்தக் கூட்டணியில் இணையுமா? தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் பிரிவு கூட்டுக்கு செல்வதற்கு இணங்குமா? போன்ற விடயங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது யாழ்ப்பாண மாநகர சபை ஆட்சியமைப்பது தொடர்பான முடிவுகள் வெளிவந்தன. தமிழரசுக் கட்சி 19 வாக்குகளையும், தமிழ்த்; தேசியப் பேரவை - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 16 வாக்குகளையும் பெற்றிருந்தன. தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்திருந்தது. அதி கூடுதலான வாக்குகளை பெற்ற கட்சி என்ற வகையில் ஆட்சி நிர்வாகத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வாக்களித்துள்ளன.
இது மீண்டும் 2009க்கு பின்னரான தமிழ் அரசியல் போக்குகளையே வெளிப்படுத்தியுள்ளது.
எனக் கூறலாம். 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் அரசியல் சூழலில் இரண்டு அரசியல் போக்குகள் வெளிப்பட்டன. ஒன்று இதுவரை காலமும் பின்பற்றிய தமிழ்த் தேசிய அரசியலை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தும் முன்னெடுப்பது. இரண்டாவது தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலை முன்னெடுப்பது. முதலாவதைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரதிபலிக்க, இரண்டாவது போக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிபலித்தது இதுவே பிற்காலத்தில் எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் எனக் வளர்வதற்கு காரணமாக அமைந்தது.
யாழ்ப்பாண மாநகர சபை ஆட்சியமைப்பு போட்டியிலும் இது பிரதிபலித்துள்ளது. இணக்க அரசியல் காரணமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழரசுக் கட்சிக்கு ஆதரவளித்துள்ளன. தமிழ்த் தேசியப் பேரவை - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கூட்டுக்கு அவை வாக்களிக்க முன்வரவில்லை.
இந்த இரண்டு போக்குகள் தொடர்கதை தானா? என்பதையும் அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.