வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!
வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் மூளாய் - நேரம் பகுதி மக்கள் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸாமா அதிபரின் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
மூளாயில் உள்ள மதுபான நிலையம் ஒன்றிற்குள் இடம்பெற்ற மோதல் சம்பவமே கடந்தசில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. மதுபான நிலையத்தில் வைத்து எமது பகுதியைச் சேர்ந்தவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது எமது பகுதியை சேர்ந்த இன்னொருவர் எழுந்து ஏன் அவரை தாக்குகின்றீர்கள் என கேட்டபோது அவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவரின் மகன்கள் இருவர் மதுபான நிலையத்திற்கு கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டனர்.
பின்னர் காயமடைந்த எமது பகுதியைச் சேர்ந்த இருவரும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்தபோது பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றபோது பொலிஸார் முன்னேற்பாடு பதிவு செய்யவில்லை. ஆனால் தாக்குதல் நடாத்திய ஒருவரை கைது செய்து வைத்திருந்தனர். தாக்குதல் நடாத்திய மற்றவர்களையும் அழைத்து, எமது தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரினோம். ஆனால் பொலிஸ் அதனை செய்யவில்லை. எங்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியடித்தனர்.
பின்னர் எமது பகுதியைச் சேர்ந்த ஒருவர் வேலை முடிந்து வரும்போது மற்றைய குழுவினர் பிடித்துச் சென்று அவர்மீது கொடூர தாக்குதல் நடாத்தினர். பின்னர் நாங்கள் சம்பவம் அறிந்து சென்றபோது அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பொலிஸார் அவரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றவேளை ஏற்கனவே தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கோரியவேளை பொலிஸார் தாகாத வார்த்தையால் எம்மை திட்டி, எம்மையும் இப்படித்தான் தாங்கள் தாக்கிவிட்டு உள்ளே தூக்கி போடுவோம் என கூறினர். பின்னர் நாங்கள்தான் நோயாளர் காவு வண்டியை அழைத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். பொலிஸார் மயங்கிய நபரை வைத்தியசாலைக்கு கூட கொண்டு செல்ல முன்வரவில்லை.
இதற்கு பின்னர்தான் ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக இணைந்து எமது ஊருக்குள் தாக்குதல் நடாத்துவதற்கு வரும்போதே எமது ஊர் மக்கள் இணைந்து அவர்களை விரட்டியடித்துவிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி வந்த பின்னர் பொலிஸ் காவலில் வைத்து ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். பொன்னாலை பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றில் மாணவன் ஒருவர் தனது உழைப்பில் தனது வீட்டில் குழாய் கிணறு அமைக்கும்போது அங்கு சென்ற பொலிஸார் அது தவறான விடயம் என கூறி இலஞ்சம் பெற்று சென்றனர். பொன்னாலை பகுதியில் இருந்து சந்தேகநபர் ஒருவரை கிராம சேவகர், பிரதேச செயலர் ஆகியோர் பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் அவர் சில தினங்களுக்கு பின்னர் பொன்னாலையில் புதர் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே இந்த பொறுப்பதிகாரி எமக்கு தேவையில்லை. ஒரு திறமையான பொறுப்பதிகாரியை எமது பொலிஸ் நிலையத்திற்கு வழங்குங்கள். இந்த பொலிஸ் பொறுப்பதிகாரியால் எமது மக்களுக்கு சீரான சேவையை வழங்க முடியாது என்றனர்.
மக்களையும், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், உதவிப் பொலிஸ் அத்தியட்யட்சகரையும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும், அழைத்த யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கடுமையாக எச்சரித்து, உடனடியாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.