Breaking News

50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி..!


50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி..!




யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அதன் தலைவர் கி.கலைச்செல்வன் தலமையில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக வீதியிலிருந்து விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளையாட்டுமைதானம் வரை அழைத்துவரப்பட்டு மங்கல சுடர்கள் பிரதம, சிறப்பு விருந்தினர்களால் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.


கடந்த 24/05/2025 அன்று ஆரம்பமான போட்டிகளின் ஆண்கள் பிரிவில் ஐந்து அணிகளும், பெண்கள் பிரிவில் மூன்று அணிகளும் விளையாடின.


நேற்றைய தினம் இடம் பெற்ற ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் ரைசிங் ரைற்றஸ் அணியும், வடமராட்சி சுப்பர்கிங் அணியும் மோதின. இதில் வடமராட்சி சுப்பர்கிங் அணி வெற்றியீட்டியது.


இதேவேளை பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணியும், சுடர்ஸ்ரார் அணியும் விளையாடின.இதில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணி வெற்றியீட்டியது.


இதில் வெற்றியீட்டிய அணிகளுக்களுக்கும், ஆட்டநாயகர்கள், ஆகியோருக்கான பணப் பரிசில்கள், கேடயங்கள், பதக்கங்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், கிராமத்தவரும், கரவெட்டி வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான வைத்தியக்கலாநிதி வேலாயுதம் கமலநாதன், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட. ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான மாரிமுத்து நவநீதமணி, நெல்லியடி கிழக்கு கிராம சேவகர் பத்மசிறி பிரேமிளா, நெல்லியடி கிழக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுஜிதா பிரசாந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி விஜயா குகதாஸ் ஆகியோர் வழங்கிவைத்தனர்.


இந்நிகழ்வில் நெல்லியடி கிழக்கு புதுத்தோட்ட மக்கள், அயல் கிராம மக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.